Published : 13 Feb 2018 10:22 AM
Last Updated : 13 Feb 2018 10:22 AM

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ‘ரிவேரா-2018’ சர்வதேச கலைத் திருவிழா: கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தொடங்கி வைக்கவுள்ளார்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில், ‘ரிவேரா-2018’ என்ற சர்வதேச கலை மற்றும் விளையாட்டு திருவிழாவை, வரும் 15-ம் தேதி கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தொடங்கி வைக்கவுள்ளார்.

இதுதொடர்பாக விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘விஐடியில் ரிவேரா-2018 என்ற சர்வதேச கலைத் திருவிழா வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. இதனை, கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தொடங்கி வைக்கவுள்ளார். தொடர்ந்து, 4 நாட்கள் நடைபெறும் ரிவேரா நிகழ்ச்சியில் 25 நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

ரிவேரா கலை விழாவில் 16 வகையான விளையாட்டுப் போட்டிகள், நாட்டியம், தெருக்கூத்து, கவிதை, கட்டுரை, கருத்தரங்கம், குறும்படம் தயாரித்தல், விவாத அரங்கம் என 128 நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ரிவேரா நிகழ்ச்சியின் தொடக்கமாக வரும் 15-ம் தேதி 4 ஆயிரம் பேர் பங்கேற்கும் மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது.

2-ம் நாள் நிகழ்ச்சியில் பின்னணி பாடகர் விஜய் பிரகாஷ், பாடகிகள் சைந்தவி, ஷெர்லி சேத்தியா பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 3-ம் நாள் நிகழ்ச்சியில் விக்ரம் வேதா திரைப்பட இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி, இறைவி பட நாயகி பூஜா தேவரய்யா உள்ளிட்டோர் பங்கேற்பர். வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள இறுதி நாள் நிகழ்ச்சியில் நடிகர் ராணா பங்கேற்கிறார்’’ என்றார்.

இதனைத் தொடர்ந்து, ரிவேரா விளம்பர போஸ்டர்களையும் பனியனையும் வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியிட, ரிவேரா மாணவர் குழுவினர் பெற்றுக்கொண்டனர். அப்போது, விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x