

மறைமலை நகர்: காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியில் இடையூறுகள், சவால்களை எதிர்கொண்டு, திமுக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று இண்டியா கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தினார்.
இண்டியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி (தனி) திமுகவேட்பாளர் க.செல்வம் அறிமுக கூட்டம் மற்றும் செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதி இண்டியா கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் மறைமலை நகர் அடுத்த மல்ரோசபுரத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.செல்வம் மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.
தொகுதி நிதி: ஆனால், அதிமுக தரப்பில் போட்டியிடும் வேட்பாளரை யாருக்காவது தெரியுமா? செங்கல்பட்டு மாவட்டத்திலேயே அதிக புறம்போக்கு நிலங்கள் உள்ள ஊராட்சி, தாம்பரம் அருகேயுள்ள பெரும்பாக்கம் ஊராட்சிதான். அங்கு அதிக அளவிலான நிலத்தை பிளாட் போட்டு விற்றவருக்கு வாக்களிக்கப் போகிறீர்களா?
கரோனாவைக் காரணம் காட்டி, 3 ஆண்டுகளில் ரூ.15 கோடி தொகுதி நிதியை வழங்காமல் இருந்தவர் பிரதமர் மோடி. இதை மக்கள் உணர வேண்டும்.
இண்டியா கூட்டணிக் கட்சியினர், திறம்பட தேர்தல் பணியாற்ற வேண்டும். இடையூறுகள், சவால்களை எதிர்கொண்டு, திமுக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.