

உதகை: நீலகிரி தனி தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இதையொட்டி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கடந்த 25-ம் தேதி எல்.முருகன் நீலகிரி வந்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் மாலை 5 மணி அளவில் உதகை அடுத்த கடநாடு கிரியுடையார் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது கடநாடு சமுதாயக் கூடம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நடத்துவது குறித்து எந்தவித அனுமதி யும் வாங்கவில்லை என்று கூறப் படுகிறது. இதுகுறித்து பறக்கும் படை துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அவருடன் இருந்த பாஜக மாவட்ட தலைவர் மோகன்ராஜ், நிர்வாகிகள் ஜெகதீஸ், ராஜேஷ், யுவராஜ், ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.