Published : 30 Mar 2024 05:30 AM
Last Updated : 30 Mar 2024 05:30 AM

கருவிலேயே குறைபாடுகளுடன் இருக்கும் சிசுக்கள் குறித்து விஎச்எஸ் மருத்துவமனையில் அரசு மருத்துவர்களுக்கு பயிற்சி

கருவில் உள்ள சிசு பரிசோதனை உள்ளிட்ட மகப்பேறு மருத்துவம் குறித்து சென்னை தரமணி விஎச்எஸ் மருத்துவமனையில் தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பங்கேற்ற அரசு மருத்துவர்கள். (உள்படம்) நிகழ்ச்சியில் உரையாற்றும் விஎச்எஸ் மருத்துவமனை கவுரவ செயலாளர் மற்றும் கருப்பை சிசு மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மருத்துவர் எஸ்.சுரேஷ்.

சென்னை: கருவில் பிரச்சினையுடன் இருக்கும் 5 சதவீத சிசுக்களை கண்டறிவது குறித்து, சென்னை தரமணியில் உள்ள விஎச்எஸ் மருத்துவமனையில் அரசு மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மெடிஸ்கேன் நிறுவனத்தின் சேவை தொண்டு நிறுவனம் கருப்பை சிசு மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை (Fetal Care Research Foundation) ஆகும். இந்த அறக்கட்டளை, சோழமண்டலம் காப்பீடு நிறுவனத்தின் பெரு நிறுவனகூட்டு சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்)நிதியின் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு தொடர் மருத்துவக் கல்விநிகழ்ச்சியை விஎச்எஸ் மருத்துவமனையில் நேற்று நடத்தியது.

விஎச்எஸ் மருத்துவமனை கவுரவ செயலாளர் மற்றும் கருப்பைசிசு மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிஅறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மருத்துவர் எஸ்.சுரேஷ், மருத்துவர்கள் இந்திராணி சுரேஷ், சுதர்சன் சுரேஷ், நித்திய கல்யாணி, நாகலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுஉரையாற்றினர்.

அப்போது அவர்கள், கருவில் இருக்கும் 100 சிசுக்களில் 5 சிசுக்களுக்கு குறைபாடுகள் ஏற்படுகின்றன. பிறவி குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளை வைத்துக் கொண்டு பெற்றோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, குறைபாடுகள் உள்ள 5 சதவீத சிசுக்களைக் கருவிலேயே அடுத்தடுத்தக் கட்ட ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மூலம் எப்படி கண்டறிய வேண்டும்.

பிரச்சினை கண்டறியப்பட்டால், என்ன மாதிரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்என்பது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு 3 கட்ட வகுப்புகள் நடத்தி பயிற்சி அளித்தனர்.

கருப்பை சிசு மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை ஒருங்கிணைப்பு செயலாளர் ஜெய பாலச்சந்திரன் கூறுகையில், ``வசதி இல்லாத கர்ப்பிணிகளின் பரிசோதனைகளுக்கும், பிறக்கும் குழந்தைகளின் மருத்துவத்துக்கும் தேவையான பொருள் உதவியை அறக்கட்டளை செய்து வருகிறது.

வசதி இல்லாத ஏராளமானோர் உதவிக்காக எங்களிடம் வருகின்றனர். எங்களால் முடிந்த அளவுக்கு உதவியைச் செய்து வருகிறோம். பெரிய நிறுவனங்கள் தங்களுடைய சிஎஸ்ஆர் நிதியை வழங்கினால் தேவைப்படும் அனைவருக்கும் எங்களால் மருத்துவ உதவியைச் செய்ய முடியும்.இது வசதி இல்லாத கர்ப்பிணிகளுக்கும் சமுதாயத்துக்கும் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். கர்ப்பத்தில் குறைபாடுகளுடன் இருக்கும் சிசுவின் மருத்துவத்துக்குத் தேவையான நிதியைத் தமிழக அரசும் ஒதுக்கினால் நன்றாக இருக்கும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x