

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது, பொதுமக்கள், வணிகர்கள் ரூ.2 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் நா.பெரியசாமி வெளியிட்ட அறிக்கை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள பகுதிகளில், மக்கள் வெளியே செல்லும்போது ரொக்கப் பணம் ரூ.50 ஆயிரம் மட்டுமே வைத்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் வரம்பு நிர்ணயித்துள்ளது.
இது வணிகர்கள், பொதுமக்களை கடுமையாக பாதிக்கிறது. திருமணம் உள்ளிட்ட சில சமூக காரியங்கள் தடைபடுவதாகவும் தகவல் வருகிறது.
இதனால், தேர்தல் நாள் (ஏப்.19) வரை வணிக நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வணிகர்கள், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, வழிப்பயணத்தில் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் எடுத்துச் செல்லும் வகையில் நடத்தை விதியில் திருத்தம் செய்து அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.