Published : 29 Mar 2024 09:18 AM
Last Updated : 29 Mar 2024 09:18 AM

“பாஜக தவறு செய்தால் நாங்கள் தட்டிக்கேட்போம்” - மதுரையில் இபிஎஸ் பேட்டி

மதுரை: “பாஜக தவறு செய்தால் நாங்கள் தட்டிக்கேட்போம். தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு வருகின்ற திட்டங்களைக் கடுமையாக எதிர்ப்போம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனுக்காக மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தை எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்வில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்,

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிச்சாமி கூறுகையில் ”மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி ஏற்பட்டதை அடுத்து நிர்வாகிகள் தொண்டர்கள் எழுச்சியோடு செயல்பட்டு வருகிறார்கள். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் ஒரே அலை தான் வீசுகிறது, அது அதிமுக அலையாக வீசுகிறது. அதிமுக என்னென்ன சாதனைகள் செய்தோம் இனி என்ன சாதனைகள் செய்யப் போகிறோம் என மக்களிடம் கூறுவதால் மக்கள் அதிமுக கூட்டணியை விரும்புகிறார்கள்.

முதல்வரே விளக்கமளிக்கட்டும்.. அதிமுக கள்ளக்கூட்டணி வைத்துள்ளது என முதல்வர் விமர்சனம் செய்வதற்கு அவரே விளக்கம் அளிக்க வேண்டும். இப்படி எல்லாம் யாரும் விமர்சனம் செய்ததே இல்லை. ஒவ்வொரு தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படுகிறது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது அவதூறு பரப்பி வருகின்றனர். தோல்வி பயத்தின் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அதிமுகவை அவதூறாகப் பேசி வருகிறார்கள்.

நாங்கள் முன்னர் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம். இப்போது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். திமுக மாதிரி நாங்கள் அல்ல. அதிமுக கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கும் கட்சி. கூட்டணியில் இருக்கும் போது கட்சியினரை விமர்சனம் செய்யக்கூடாது. அப்படி விமர்சனம் செய்தால் உள்ளடி வேலை செய்வதாக அர்த்தம். கூட்டணிக் கட்சிகளை விமர்சனம் செய்வது திமுகவுக்கு கைவந்த கலை. கூட்டணி கட்சியினருக்கு அதிமுக என்றுமே விசுவாசமாக இருக்கும். கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதால் பாஜக தவறு செய்தால் நாங்கள் தட்டிக்கேட்போம். தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு வருகின்ற திட்டங்களைக் கடுமையாக எதிர்ப்போம்.

தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள். யார் தோல்வி அடைவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். அதிமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மக்களிடம் அபார செல்வாக்கு உள்ளது. அதனால் 40 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம்.

சொந்தப் பிரச்சினை.. தேர்தலில் நிற்க பணம் இல்லை என நிர்மலா சீதாராமன் கூறி இருப்பது அவருடைய சொந்த பிரச்சினை. இது குறித்து அவர் தான் கருத்து கூற வேண்டும்,

தொண்டர்களின் முடிவு: அதிமுகவில் 2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது 2 கோடி அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு. அது எனது தனிப்பட்ட முடிவு அல்ல. ஓ பன்னீர்செல்வத்தை எதிர்த்து தேர்தலில் போட்டியிடக் கூடிய 5 ஓ.பன்னீர்செல்வமும் தேர்தலில் நிற்கத் தகுதியானவர்களே. தேர்தலில் மிட்டா மிராசுகள் நின்ற காலம் போய் சாமானிய தொண்டனும் போட்டியிடலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது.

இரட்டை வேடம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை எதிர்ப்பது போல் வெளியில் வீரவசனம் பேசி வருகிறார், ஆனால், கருப்புக்குடை பிடித்தால் பிரதமர் கோபித்துக் கொள்வார் என அவர் வெள்ளைக் குடை பிடிக்கிறார். தமிழ்நாட்டில் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அமைச்சர் உதயநிதி ஓடோடிச் சென்று பிரதமரை அழைத்து வருகிறார் பிரதமர் இடத்தில் சரணாகதி அடைந்து விட்டு வெளியே பிரதமரை எதிர்ப்பது போல் இரட்டை வேடம் போடுகிறார்கள்.” எனப் பேசினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x