Published : 29 Mar 2024 09:05 AM
Last Updated : 29 Mar 2024 09:05 AM

கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜ்குமார் பெயரில் 5 சுயேச்சைகள் போட்டி

திமுக வேட்பாளர் ராஜ்குமார்

கோவை: கோவை, பொள்ளாச்சி மக்களவை தொகுதிகளில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் உட்பட 59 மனுக்கள் ஏற்கப்பட்டன. கோவை தொகுதியில் ராஜ்குமார் என்ற பெயரில் 6 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

கோவை மக்களவை தொகுதியில் மொத்தம் 59 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி தலைமையில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன், பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனு உட்பட 41 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் மொத்தம் 29 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தேர்தல் அலுவலர் மோ.ஷர்மிளா தலைமையில் மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் ஈஸ்வரன், அதிமுக வேட்பாளர் அ.கார்த்திகேயன், பாஜக வேட்பாளர் கே.வசந்த ராஜன் வேட்பு மனு உட்பட 18 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும், திமுக, அதிமுக வேட்பாளர்கள் பெயர்களில் சுயேச்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. திமுக சார்பில் போட்டியிடும் ராஜ்குமார் பெயரில் 5 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதேபோல அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன் பெயரில் இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை கடைசி நாள் என்பதால், நாளை மாலை இறுதி வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்படும் போது திமுக, அதிமுக வேட்பாளர்களின் பெயர்களில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களின் இறுதி எண்ணிக்கை தெரிய வரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x