Published : 29 Mar 2024 06:12 AM
Last Updated : 29 Mar 2024 06:12 AM

தேர்தல் விதிகளால் வணிகர்களுக்கு பாதிப்பு தொடர்ந்தால் ஏப்.19-ம் வரை கடையடைப்பு போராட்டம் : விக்கிரமராஜா எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும் போதெல்லாம் வணிகர்கள் அச்சுறுத்தப்படுவதும், அவதிக்குள்ளாவதும் இன்றளவும் தொடர்கிறது. தற்போது தேர்தல் செலவினம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வணிகர்கள் எடுத்துச் செல்லும் ரொக்கத் தொகை மட்டும் உயர்த்தாமல் இருப்பது நீதிக்கு முரணானது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக அரசியல்வாதிகளால் எடுத்துச்செல்லப்படும் ரொக்கம் போன்றவை இதுவரை கைப்பற்றப்பட்டதாகவோ, பறிமுதல் செய்யப்பட்டதாகவோ எவ்வித செய்திகளும் இல்லை. நேர்மையான வணிகம் செய்பவர்களின் அன்றாட செலவினங்களுக்காக எடுத்துச் செல்லும் ரொக்கமே அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டலம் சார்ந்த அனைத்து மாவட்டங்களின் அவசர ஆலோசனைகூட்டம் சென்னை கோயம்பேட்டில் நேற்று நடைபெற்றது.

இதில் தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கத்தால் வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, ஓரிரு நாளில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியை மீண்டும் சந்தித்து முறையிட இருக்கிறோம். தீர்வு கிடைக்காவிட்டால்,தேர்தல் நடத்தை விதிகள் எனக் கூறி வணிகர்களை வதைப்பதைக் கண்டித்து, ஏப்.19-ம் தேதி வரை தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்த நேரிடும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x