குத்தகை வீடுகளை அடமானம் வைத்து மோசடி: டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம்

குத்தகை வீடுகளை அடமானம் வைத்து மோசடி: டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம்
Updated on
2 min read

சென்னை: குத்தகைக்கு எடுக்கும் வீடுகளை முறைகேடாக அடமானம் வைத்து மோசடி செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது வீட்டை குத்தகைக்கு எடுத்த ராமலிங்கம், தனக்கு தெரியாமல் அந்த வீட்டை அடமானம் வைத்து மோசடி செய்ததாக சென்னை முகப்பேரைச் சேர்ந்த கனகராஜ் எனபவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராமலிங்கத்துக்கு கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், ஜாமீனை ரத்து செய்யக்கோரி கனகராஜ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, சமீப காலங்களில் அதிகரித்து வரும் இதுபோன்ற முறைகேடுகள் குறித்து விளக்கம் அளிக்க அரசுத் தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு வியாழக்கிழமை விசாரணை வந்தது. அப்போது, அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், இதுபோன்ற முறைகேடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் அதிகார எல்லைக்குள் மட்டும் 40 வழக்குகள் பதிவாகி உள்ளது. அதில் 7 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டு, 67 வீட்டு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாம்பரம் காவல் ஆணையர் அதிகார எல்லைக்குள் பதிவு செய்யப்பட்ட 9 வழக்குகளில், 13 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது. அதில் 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆவடி காவல் ஆணையர் அதிகார எல்லைக்குள் பதிவான 4 வழக்குகளில் 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது. அதில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரும் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அதில், 1020 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 41 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது, என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 65 கோடி ரூபாக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக கூறியுள்ள நிலையில், இந்த மோசடி கும்பல், அடுத்தவர்கள் சொத்தை அடமானம் வைத்து பணத்தை எல்லாம் சுருட்டிய பின்னர், இது உரிமையியல் பிரச்சினை என திசை திருப்பி,மோசடி கும்பல் வழக்கை இழுத்தடிப்பதாக அதிருப்தி தெரிவித்தார். சட்டத்தை தெளிவாக போலீஸார் புரிந்துகொள்ளாததால், 2013-ம் ஆண்டில் பதிவான மோசடி வழக்கில் கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் உள்ளது.

இதுபோன்ற மோசடி வழக்குகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமாக உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி , அதனால் இந்த மோசடி கும்பல் குறித்தும், மோசடி குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார்.

எனவே, இந்த வழக்கில் காவல் துறை டிஜிபியை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதி, இதுபோன்ற மோசடியை தடுக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in