Published : 28 Mar 2024 11:35 AM
Last Updated : 28 Mar 2024 11:35 AM

இலங்கையில் சிறைபட்டுள்ள மீனவர்களை மத்திய அரசு தலையிட்டு மீட்க வேண்டும்: முத்தரசன்

ரா.முத்தரசன்

சென்னை: இலங்கையில் சிறைபட்டுள்ள மீனவர்களை மத்திய அரசு தலையிட்டு மீட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையும், கடல் கொள்ளையர்களும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என உறுதியளித்த பாஜகவின் பத்தாண்டு காலமும் மீனவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை.

அண்மையில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமநாதபுரம், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களையும், புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகு உள்ளிட்ட உடைமைகளை பறிமுதல் செய்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ராமேஸ்வரம் அந்தோணி முத்துவுக்கு ஒராண்டு சிறை தண்டனையும், விசைப்படகு ஓட்டுநர்கள் அந்தோணி லோபஸ், முருகானந்தம் ஆகிய இருவருக்கும் தலா ஆறுமாத சிறை தண்டனையும் விதித்து யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகு நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதலை பாஜக மத்திய அரசு அரசியல் உறுதியுடன் தடுக்க எந்த முயற்சியும் எடுக்காததால் தற்போது இலங்கை அரசு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு தண்டனை விதித்து சிறையில் அடைத்து வருகிறது. மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறிய மத்திய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவிப்பதுடன் இலங்கையில் சிறைபட்டுள்ள மீனவர்களை விடுவித்து நாடு திரும்ப அழைத்து வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x