Published : 28 Mar 2024 05:07 AM
Last Updated : 28 Mar 2024 05:07 AM

தேர்வெழுதி 11 மாதங்களாகியும் தேர்வுப் பட்டியல் வெளியாகவில்லை: கிராம அஞ்சல் ஊழியர்கள் அதிருப்தி

திருச்சி: தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் அஞ்சல்காரர், அஞ்சல் பாதுகாவலர், பன்முகப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கான துறை ரீதியான தேர்வு கடந்த ஆண்டு ஏப்.30-ம்தேதி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், அஞ்சல்காரர், அஞ்சல் பாதுகாவலர் ஆகியபணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டன. ஆனால், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பன்முகப் பணியாளர் தேர்வுக்கான மதிப்பெண்பட்டியல் கடந்த நவ.23-ம் தேதிவெளியிடப்பட்டும், தேர்வானவர்களின் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை.

இதுகுறித்து அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க திருச்சி கோட்டச் செயலாளர் மருதமுத்து, ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: தேர்வுப் பட்டியலை வெளியிடுவதற்கு ஏற்படும் காலதாமதத்தால், பன்முகப் பணியாளருக்கு பணிமூப்பு, சம்பள இழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. தேர்வுஎழுதி, நல்ல மதிப்பெண் பெற்றும்,இவர்களில் யாரேனும் இந்த காத்திருப்பு காலத்தில் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுமா என்ற கேள்வியும் உள்ளது.

இதற்கிடையே, 2024-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வும் நெருங்கிவிட்டது. கடந்த தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்படாத நிலையில், இந்தத் தேர்வைஎழுதுவதா, வேண்டாமா என்றகுழப்பத்தில் பலரும் உள்ளனர்.

தேர்தல் காலம் என்பதை காரணம் காட்டி, தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை அறிவிக்கதடையில்லை. ஏனெனில், மகாராஷ்டிரா, பிஹார் மாநிலங்களில்கூட தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான், தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இனியும் காலம் தாமதிக்காமல் தேர்வானவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x