Published : 06 Feb 2018 09:05 AM
Last Updated : 06 Feb 2018 09:05 AM

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், வேலூரில் 2 தாலுகாக்கள் இணைப்பு: சிஎம்டிஏவின் திட்ட எல்லை விரிவாக்கம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) திட்ட எல்லை காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி தாலுகாக்கள் வரை விரிவுபடுத்தப்பட் டுள்ளது.

சென்னை நகரில் அதிகரித்துவரும் மக்கள் தொகை நெருக்கத்தை குறைப்பது, அதிவேக மாக நகர்மயமாகிவரும் புறநகர்ப் பகுதிகளில் வளர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவது ஆகியவை அவசியமாகியுள்ளது. அதேபோல, சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டி உள்ளது. இதை கருத்தில்கொண்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் வட்டத்தையும் உள்ளடக்கி, 8,878 சதுர கிலோமீட்டரில் சென்னை பெருநகர திட்டப் பகுதியின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என்று கடந்த ஆண்டு சட்டப்பேரவை யில் அப்போதைய வீட்டு வசதித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

இப்பகுதிகள் ஒருங்கிணைந்த நகர்மயமாவதை உறுதி செய்யவும், சமமான வளர்ச்சியை விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் ஏற்படுத்தவும் தற்போதுள்ள நகர் மையங்களையும், புதிய பொருளாதார வளர்ச்சி மையங்களையும் தேர்வு செய்து, விரிவாக்கப்பட்ட பகுதி முழுமைக்கும் ஒரு மண்டல வியூக திட்டம் தயாரிக்கப்படும்.

இந்த வளர்ச்சித் திட்டங்களில் போக்குவரத்து, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வளம்மிக்க விவசாய நிலங்கள் பாதுகாத்தல் போன்ற அம்சங்களுக்கும் போதிய கவனம் செலுத்தப்படும். இந்த குறிக்கோளை நிறைவேற்றும்விதமாக, தற்போதுள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாக அமைப்பை பலப்படுத்த தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, விரிவாக்கத்துக்கான பணிகள் தொடங்கின. பல்வேறு கட்ட கூட்டத்துக்குப்பின், கடந்த மாதம் பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக, எழும்பூரில் தற்போதைய வீட்டு வசதித் துறை அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘‘எல்லை விரிவாக்கத்துக்கான பணிகள் முடிந்து அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் அறிவிப்பு, அரசாணை வெளியாகும்’’ என்றார்.

இந்நிலையில், இது தொடர்பான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது. அதில், ‘‘எல்லை விரிவாக்கம் தொடர்பாக 2017 ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். இதை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, சென்னை பெருநகர திட்டப் பகுதியில், கூடுதல் இடங்களைச் சேர்க்க அனுமதி அளிக்கிறது. இது தொடர்பான அறிவிக்கை தமிழக அரசிதழில் வெளியிடப்படும். திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள், இதை மாவட்ட அரசிதழில் மறு வெளியீடு செய்ய வேண்டும். இதற்காக தமிழக மொழிபெயர்ப்பு இயக்குநர் தேவையான தமிழாக்கத்தை செய்து தரவேண் டும்.’’

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x