இண்டியா கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
இண்டியா கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

பாஜக அரசு பணக்காரர்களுக்கான அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Published on

காரைக்குடி அருகே புதுவயலில் இண்டியா கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க, முதன்முதலாக 1951-ம் ஆண்டு அரசியல் சாசனத்தை நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசுதான் திருத்தியது.

இதுபோன்று கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு பின்தங்கிய மக்களுக்கு ஏதாவது ஒன்றையாவது செய்துள்ளதா? பாஜக அரசு பணக்காரர்களுக்காக அமைக்கப்பட்ட அரசு.

அனைத்து மக்களுக்குமான சட்டம், பொருளாதார மேம்பாடு தான் சமூக நீதி. நாட்டில் உள்ள 140 கோடி பேரில் கீழ் பாதி 70 கோடி பேரிடம் 3 சதவீத சொத்துகள் உள்ளன. மேல் பாதி 70 கோடி பேரிடம் 97 சதவீதம் சொத்துகள் உள்ளன.

அதிலும் 10 சதவீதம் பேரிடம் 52 சதவீதம் உள்ளது. கீழ் பாதி 70 கோடி பேருக்கு 13 சதவீத வருமானம், மேல் பாதி 70 கோடி பேருக்கு 87 சதவீத வருமானம். இது எப்படி சமுதாய நீதியாகும்? நாட்டின் வளர்ச்சியின் பலன் அனைத்து மக்களையும் சென்றடையவில்லை. 24 கோடி பேரை ஏழ்மையில் இருந்து மீட்டது மன்மோகன் அரசு. ஏழைகளை மீட்க மோடி அரசு என்ன செய்தது?

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை, அரசுப் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு உதவித் தொகை, காலை சிற்றுண்டி வழங்கியது, மகளிருக்கு நகர பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் போன்றவைதான் சமூக நீதி. காலை உணவுத் திட்டம் ஜாம்பவான் முதல்வர்களுக்கு கூட தோன்றாத யோசனை. இவ்வாறு சிதம்பரம் பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in