தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முடிகிறது: மதியம் 3 மணி வரை மனுக்கள் பெறப்படும்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 3 மணியுடன் முடிவடைகிறது. இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. ஆரம்ப நாட்களில் மனுதாக்கல் மந்தமாக இருந்தது. சில சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். டெபாசிட் தொகைக்காக ரூபாய் நோட்டுகள், சில்லறை காசுகளை மூட்டையாக கொண்டு வந்தது, ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிந்து வந்தது, மனுதாக்கல் செய்ய மாட்டு வண்டியில் வந்தது என சில வேட்பாளர்கள் கவனம் ஈர்த்தனர்.

இந்த நிலையில், மார்ச் 25-ம் தேதி பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதால் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால், வேட்பாளர்கள், கட்சியினர் வருகையால் தேர்தல் அலுவலகங்கள் களைகட்டின.39 தொகுதிகளிலும் மனுதாக்கல் விறுவிறுப்பாக நடந்தது.

விருதுநகரில் மனுதாக்கல் செய்ய வந்த பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். அதேபோல, தென் சென்னையில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனும், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனும், ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். வடசென்னை தொகுதியில் திமுக - அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. நீலகிரியில் அதிமுக, பாஜக கட்சியினர் ஏராளமானோர் திரண்டதால் போலீஸார் தடியடி நடத்தும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், பல்வேறு தொகுதிகளில் நேற்றும் பரவலாக வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார். நேற்று மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் மனுதாக்கல் செய்தனர்.

இதுவரை தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் 600-க்கும் மேற்பட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி, வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 27) கடைசி நாள் ஆகும். இதனால், இன்று அதிக அளவில் மனுதாக்கல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோர் இன்று மனுதாக்கல் செய்கின்றனர்.

மனுதாக்கலுக்கான அவகாசம் இன்று மதியம் 3 மணியுடன் முடிகிறது. 3 மணிக்கு தேர்தல் அலுவலகத்தில் இருக்கும் வேட்பாளர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரிடமும் வேட்புமனுக்கள் பெறப்படும்.

மனுக்கள் பரிசீலனை நாளை (28-ம் தேதி) நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற 30-ம் தேதி கடைசி நாள். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னமும் ஒதுக்கப்படும்.

இதையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்களின் பிரச்சாரம் மேலும் சூடுபிடிக்கும். அனைவரும் வாக்களிக்க வசதியாக, ஏப்ரல் 19-ம் தேதி அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in