

சென்னை: புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தினசரி இயக்கும் பேருந்துகளுடன் கூடுதலாக கிளாம்பாக்கத்தில் இருந்து மார்ச் 28-ல் 505, மார்ச் 29-ல் 300, மற்றும் மார்ச் 30-ல் 345 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 120 பேருந்துகளும் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மார்ச் 29 (புனித வெள்ளி), மார்ச் 30 (சனிக்கிழமை) மற்றும் மார்ச் 31 (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு மார்ச் 28 (வியாழக்கிழமை) அன்று 505 பேருந்துகளும் மார்ச் 29 (வெள்ளிக்கிழமை) அன்று 300 பேருந்துகளும், மார்ச் 30 (சனிக்கிழமை) 345 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மார்ச் 28,29 மற்றும் 30 ஆகிய நாட்களில் 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக மார்ச் 28 அன்று 505 பேருந்துகளும் மார்ச் 29 அன்று 300 பேருந்துகளும், மார்ச் 30 அன்று 345 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 120 பேருந்துகளும், மேற்கூறிய இடங்களில் இருந்தும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 13,622 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 3,929 பயணிகளும், சனிக்கிழமை 2,367 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 12,500 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்துக்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.