Published : 16 Feb 2018 07:06 AM
Last Updated : 16 Feb 2018 07:06 AM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: அமலாக்க துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணைக்காக அமலாக்கத் துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்று ஆஜரானார்.

மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ என்ற தொலைக்காட்சி நிறுவனம், விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளது. இதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாகவும் இதில், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து பணம் வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின் மீது 5 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கு குறித்து விசாரணை நடத்துவதற்காகவும், வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவும் ஜனவரி 11, 16 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராக வேண்டும் என கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், ஜனவரி 13-ம் தேதி சென்னை, டெல்லியில் உள்ள ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஜனவரி 18-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x