Published : 26 Mar 2024 06:09 AM
Last Updated : 26 Mar 2024 06:09 AM

கடற்கரை - கூடுவாஞ்சேரி மின்சார ரயிலை காலை நேரத்திலும் இயக்க பயணிகள் கோரிக்கை

சென்னை: கடற்கரை - கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரயில் சேவைகளை காலை நேரத்திலும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் தாம்பரம் வரை இயக்கப்பட்ட மின்சார ரயில் சேவை, கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் இரு மார்க்கத்திலும் இரவு 7 மணிமுதல் இரவு 11 மணி வரை தலா 10 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களை காலை நேரத்திலும் இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகன வசதி இல்லை: இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ``கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குச் செல்ல இணைப்பு வாகன வசதிபோதிய அளவு இல்லை. மேலும், நேரடியாக மின்சார ரயில் சேவையும் கிடையாது. அதேநேரம், சில மின்சார ரயில்கள் மாலை நேரத்தில் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இது பேருதவியாக உள்ளது. இதேபோல, காலை நேரத்திலும் மின்சார ரயில்களை கூடுவாஞ்சேரி வரை நீடிக்க வேண்டும்'' என்றனர்.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், ``கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்புக்குப் பின், பயணிகளின் நன்மைக்காக, சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி வரை இரு மார்க்கத்திலும் தலா 10 மின்சார ரயில்கள் சர்வீஸ் இயக்கப்படுகின்றன.

இதனால், இந்த தடத்தில் வழக்கத்தைவிட தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். இந்த மின்சார ரயில்களை காலையிலும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x