Published : 26 Mar 2024 07:00 AM
Last Updated : 26 Mar 2024 07:00 AM

ஐபிஎல் ரசிகர்களுக்காக சிறப்பு பேருந்துகள்: மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல்

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் காணவரும் பார்வையாளர்களுக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கழகத்தின் மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் 2024-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

இதற்கு வரும் மக்களின் நலன் கருதி சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்திடம் இருந்து மாநகர போக்குவரத்துக் கழகம் உரிய பயண கட்டணம் பெற்று சில முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது.

அதன்படி, பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருந்தால் அதை நடத்துநரிடம் காண்பித்து மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் போட்டி நடைபெறும் நேரத்துக்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், போட்டி முடிந்த பின்னர் 3 மணி நேரத்துக்கும் பேருந்துகளில் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி இன்று (மார்ச் 26) நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கும் மாநகர பேருந்துகளை இயக்க சிறப்பு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பார்வையாளர்கள் மாநகர பேருந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து இலவசமாகப் பயணிக்கலாம். இதற்காக பல பேருந்துகளைப் பயன்படுத்தியும் மைதானத்துக்கு வந்தடையலாம்.

போட்டி முடிந்த பின்பு அடையாறு, மந்தவெளி, கோட்டூர்புரம், திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம், கோவளம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், திருப்போரூர் செல்லும் பேருந்துகள் அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல பாரீஸ் கார்னர்,சென்னை கடற்கரை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மீஞ்சூர், மூலக்கடை, காரணோடை செல்லும் பேருந்துகள் சென்னை பல்கலைக்கழக பேருந்து நிறுத்தத்திலிருந்து இயக்கப்படும்.

ராயப்பேட்டை, மந்தவெளி, நந்தனம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், கிண்டி, பல்லாவரம், தாம்பரம், எழும்பூர், கோயம்பேடு, பெரம்பூர், அண்ணாநகர் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகிலிருந்து இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x