Published : 25 Mar 2024 06:38 AM
Last Updated : 25 Mar 2024 06:38 AM

தமிழகத்தில் முதல்முறையாக மகளிர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டம்

வி.கே.டி.பாலன்

மதுரை: பொங்கல் பண்டிகை நாட்களில்மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண உள்ளூர் பார்வையாளர்கள் முதல் வெளிநாட்டினர் வரை ஆர்வமாக வருகின்றனர்.

இதுவரை காளைகளை வளர்ப்பது, பயிற்சி அளிப்பது, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்துக்கு காளைகளை அழைத்து வந்து வாடிவாசலில் அவிழ்த்துவிடுவது, களத்தில் இறங்கி காளைகளை அடக்க முயற்சிப்பது என அனைத்தையும் ஆண்களே செய்து வந்தனர். ஜல்லிக்கட்டுக் காளைகளைவளர்ப்பதில் மட்டுமே பங்களித்துவந்த பெண்கள், அண்மைக்காலமாக வாடிவாசலில் காளைகளை அவிழ்த்துவிடும் நிகழ்விலும் பங்கேற்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், பெண்கள் மட்டுமே பங்கேற்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த சுற்றுலா நிறுவனங்கள், அமைப்புகள் முயற்சிஎடுத்து வருகின்றன. இதுகுறித்து சுற்றுலா நிறுவன உரிமையாளரும், ஜல்லிக்கட்டு ஆர்வலருமான வி.கே.டி.பாலன் கூறியதாவது:

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முடிவடைந்த பின்பு, அலங்காநல்லூர் அருகேயுள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பெறும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். தொடக்கத்தில் மகளிர் பங்கேற்கும் ஜல்லிக்கட்டுப் போட்டி சாத்தியமில்லை என்று எதிர்த்தவர்களே, தற்போது ஆதரவு தரத் தொடங்கியுள்ளனர்.

மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க பெண் போலீஸார், கபடி வீராங்கனைகள், கல்லூரி மாணவிகள் ஆர்வமாக முன் வந்துள்ளனர். அவர்களுக்கு 3 மாத காலம் பயிற்சி அளிக்க உள்ளோம்.

பாதுகாப்பு கவச உடைகள்: முதல் மகளிர் ஜல்லிக்கட்டு என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் பெண்களுக்கு பாதுகாப்புக் கவச உடைகள் வழங்க உள்ளோம். அதற்கான வடிவமைப்புப் பணிகள் நடக்கின்றன.

ஆண்கள் ஜல்லிக்கட்டுப்போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு வழங்கப்படும் கார்,தங்கம், பைக் போன்ற பரிசுகளைபோல, மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டியிலும் விலை உயர்ந்த பரிசுகளை வழங்க உள்ளோம். காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி, உயிருக்கு ஆபத்து, காயம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்க உள்ளோம். மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தும் இடத்துக்கு உலக அளவில் உள்ள சுற்றுலா நிறுவனங்களையும், நமது நாட்டில் உள்ள 38 சுற்றுலா நிறுவனங்களையும் அழைத்து வரத் திட்டமிட்டுள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x