“விருதுநகர் தொகுதியில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் 'நாட்டாமை’யை கூப்பிடுவேன்” - ராதிகா சரத்குமார்

விருதுநகரில் பாஜக சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் ராதிகா சரத்குமார் உரையாற்றினார்
விருதுநகரில் பாஜக சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் ராதிகா சரத்குமார் உரையாற்றினார்
Updated on
1 min read

விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் நான் 'நாட்டாமை' சரத்குமாரை கூப்பிடுவேன்; அவர் பார்த்துக்கொள்வார் என்று பாஜக வேட்பாளரான நடிகை ராதிகா கூறியுள்ளார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூரில் பாஜக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்து, விருதுநகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகை ராதிகாவை அறிமுகம் செய்துவைத்தார். அவருடன் அவரது கணவரும் நடிகருமான சரத்குமாரும் உடனிருந்தார்.

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா பேசுகையில், "பாரதிய ஜனதா கட்சியினரின் ஆர்வத்தையும் வெறியையும் பார்க்கும் போது மிக சந்தோசமாக உள்ளது. பணியாற்றுபவர்களை மரியாதையாக நடத்தக்கூடிய கட்சி பாரதிய ஜனதா கட்சி. சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும், பெண்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும், தன்னம்பிக்கை இருக்க வேண்டும், சுயமரியாதையோடு வாழ வேண்டும், வேலை வாய்ப்பு இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே நம்பிக்கை மோடி தான்.

நான் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்பவள். உழைப்பு மட்டுமே என் வாழ்வில் எனக்கு துரோகம் செய்யாதது. உழைப்பு அனைவருக்கும் பலமாக இருக்கும்.‌ சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த 'நாட்டாமை' எனக்கு வழி வகுத்து கொடுத்து நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன் என ஒரு தூண் போல் அல்ல; ஒரு ஆலமரமாக நிற்கிறார். விருதுநகர் தொகுதியில் எந்த பிரச்சினை வந்தாலும் நான் நாட்டாமையை (சரத்குமாரை ) கூப்பிடுவேன். அவர் பார்த்துக்கொள்வார்" என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், "10 ஆண்டுகளில் மோடி செய்துள்ளதை மக்களிடம் எடுத்துச் சொன்னாலே போதும். இதுவே மிகப்பெரிய மாற்றத்தை உருவக்கும். பாஜகவை வலுப்படுத்தும். விருதுநகரில் கிடப்பில் போடப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் முடிப்போம். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வோம்.

தேர்தலில் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் உள்ளது. அதை நாமும் கண்காணிக்க வேண்டும். பாஜகவுடன் இணைந்ததில் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் பலருக்கும் உடன்பாடு உள்ளது. என உடன் இருப்பவர்கள் யாரும் அதிருப்தியாகவில்லை.

நல்ல ஆட்சி மத்தியில் இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் எங்களுக்கு உள்ளது. எல்லோருக்கும் வேலைவாய்ப்பும் பாதுகாப்பும் இருக்க வேண்டும். சிவகாசி பட்டாசு தொழிலில் இனிமேல் ஒரு உயிரிழப்பும் இருக்கக் கூடாது. அதற்கான திட்டப் பணிகளை முன்னெடுப்போம்" என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in