Published : 10 Feb 2018 11:34 AM
Last Updated : 10 Feb 2018 11:34 AM

அரசுப் பள்ளி மாணவியருக்கு திடீர் வயிற்று வலியால் அவதி: சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

சத்தியமங்கலத்தை அடுத்த அரேப்பாளையம் அரசுப் பள்ளி மாணவியர், நேற்று வயிற்று வலியால் அவதிக்குள்ளானதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி அரேப்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 48 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் வாரந்தோறும் வியாழக்கிழமை பள்ளி குழந்தைகளுக்கு இரும்புச்சத்து மாத்திரை கொடுப்பது வழக்கம். நேற்று முன்தினம் மதிய உணவாக எலுமிச்சை சாதமும், முட்டையும் வழங்கப்பட்டது. மதிய உணவுக்கு பின் வழக்கம் போல், இரும்புச் சத்துமாத்திரை மாணவ, மாணவியர் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் பள்ளி தொடங்கியவுடன் 7-ம் வகுப்பு மாணவிகள் பவானி (12), வினுப்பிரியா (12), 8-ம் வகுப்பு மாணவிகள் கிருத்திகா (13), அனுஷா (13), 6-ம் வகுப்பு மாணவிகள் கிருஷ்ணவேணி (11), நதியா (11), நிஷாந்தினி (11), 2-ம் வகுப்பு மாணவி ஹாசினி (8) ஆகிய 8 மாணவிகளுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருகே உள்ள ஒங்கல்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பிரவீனுக்கு, தலைமை ஆசிரியர் தகவல் தெரிவித்தார். பள்ளிக்கு வந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சையளித்தனர்.

இதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு மாணவிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், காலநிலை மாற்றத்தால் உண்ட உணவு விஷத்தன்மையாக மாறியிருக்கலாம் என்றும், இதன் காரணமாக வயிற்று வலி வந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுவதால், எவ்வித உடல்நல பாதிப்பும் ஏற்படாது என்றும் தெளிவுபடுத்தினர். சிகிச்சை முடிந்தபின் அனைத்து மாணவிகளும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x