இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்க கூடாது: தேர்தல் ஆணையத்திடம் புதிய மனு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக்கூடாது என்று தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிடக்கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று திண்டுக்கல்லை சேர்ந்த எஸ்.சூரியமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு பழனிசாமி பதில் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. பழனிசாமி தரப்பில் அளித்த பதில் மனுவில், சூரியமூர்த்தி அதிமுகவில் அடிப்படை உறுப்பினரே இல்லை. சின்னம் தொடர்பாக மனு அளிக்க அவருக்கு உரிமை இல்லை என பதில் அளிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், கே.சி.சுரேன், ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவில், பழனிசாமிக்கு பதிலாக, கட்சியின் அவைத் தலைவர் தேர்தல் ஆவணங்களான ஏ, பி படிவங்களில் கையெழுத்திட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் சூரியமூர்த்தி மற்றொரு மனுவை நேற்று தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: சிவில் நீதிமன்றம் இன்றளவும் என்னை அதிமுக உறுப்பினர் இல்லை என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

எனவே பல்வேறு சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை பழனிசாமி தரப்புக்கோ, வேறு நபர்களுக்கோ ஒதுக்க கூடாது என தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in