செந்தில் பாலாஜி மனு மீது மார்ச் 28-ல் தீர்ப்பு - அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் வழக்கு

செந்தில் பாலாஜி | கோப்புப்படம்
செந்தில் பாலாஜி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை மார்ச் 28-ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், ‘செந்தில் பாலாஜியிடம் 67 கோடியே 40 லட்சம் ரூபாய் இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை. அமலாக்கத் துறை வழக்கில் செந்தில் பாலாஜி தண்டிக்கப்படும் நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டால் என்ன ஆகும்?’ என கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று வாதிடப்பட்டது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில், ‘கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2015, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் அதிகளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 30 கோடி ரூபாய் கண்டெடுக்கப்பட்டது. பணம் பெற்றுக் கொண்டு தகுதியில்லாதவர்களுக்கு வேலை வழங்கியது குற்றச் செயல்.

வழக்கு விசாரணையை முடக்கும் நோக்கில் செந்தில் பாலாஜி சார்பில் தொடர்ச்சியாக மனு தாக்கல் செய்யப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை மார்ச் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in