

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநிலக்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நாளை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியதாவது: தேர்தல் பணிகள் தொடர்பான கருத்துகளை கேட்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலகட்சிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் தலைமைசெயலகத்தில் 23-ம் தேதி (நாளை) பகல் 12 மணிக்கு நடைபெறும்.
தமிழகத்தில் கடந்த மார்ச் 16-ம்தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அன்று முதல், நேற்று காலை வரை, ரூ.7.81 கோடி ரொக்கம், ரூ.59 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள், ரூ.32 லட்சம் மதிப்பிலான கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள், ரூ.22 லட்சம் மதிப்பிலான தங்கம்உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள், ரூ.38 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் என ரூ.9.32 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் சார்பில், வேட்பாளர்களை அறிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வேட்பாளர் பெயர், அவரைப்பற்றிய தகவல்கள், குற்ற வழக்குகள், அந்த வழக்குகளின் நிலை உள்ளிட்ட விவரங்கள், சொத்து விவரங்கள் இடம் பெறும்.
தற்போது முதல்முறையாக புதிய வாக்காளர்களுக்கு, எப்படிவாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களுடன், வாக்காளர் உள்ள வீடுகளுக்கு தலா ஒரு வாக்காளர் கையேடு, பூத் சிலிப் உடனோ அல்லது அதற்கு முன்னதாகவோ வழங்கப்படும்.
கோவையில் பிரதமர் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் விவகாரத்தில், விசாரணை நடத்தமாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள் ளார். அந்த அறிக்கை இன்னும் வரவில்லை. மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்டவற்றை பொறுத்தவரை அரசு தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்களை அப்படியே தொடரலாம்.
அலுவலர்களின் வழக்கமான பணிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் மூலம் எந்த தடையும் இல்லை.சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனுத் தாக்கல் இல்லை.
இ்வ்வாறு அவர் தெரிவித்தார்.