

சென்னை: மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இந்நிலையில், இதற்கு முதல்வர் ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
“10 ஆண்டு கால பாசிச பாஜக அரசின் தோல்வி மற்றும் எதிர்வரும் மக்களவைத் தேர்தல் தோல்வி பயத்தாலும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலை கைது செய்துள்ளது மத்திய அரசு. இதற்கு முன்னர் இதே பாணியில் ஹேமந்த் சோரனை கைது செய்திருந்தது.
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் எந்தவொரு பாஜக பிரமுகரும் கைது நடவடிக்கையை எதிர்கொள்வதில்லை. குறைந்தபட்சம் அவர்களிடம் விசாரணை கூட மேற்கொள்வதில்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்களை தொடர்ந்து குறிவைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது பாஜக. இதுதான் பாஜகவின் அசல் முகம். இதனால் மக்களின் கோபத்தை பெற்றுள்ளது. அதோடு இது எதிர்வரும் தேர்தலில் இந்திய கூட்டணியின் வெற்றிப் பயணத்தை பலப்படுத்துகிறது” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேஜ்ரிவால் கைதுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட இண்டியா கூட்டணி கட்சியினர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.