Published : 21 Mar 2024 02:44 PM
Last Updated : 21 Mar 2024 02:44 PM

மருத்துவர் சரவணன் மதுரை அதிமுக வேட்பாளர் ஆனது எப்படி?

மருத்துவர் சரவணன்

மதுரை: மதிமுக, பாஜக, திமுக போன்ற கட்சிகளுக்குச் சென்று வந்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு அதிமுகவில் சேர்ந்த மருத்துவர் சரவணன், மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிடு வதற்கு அதிமுகவில் நிர்வாகி களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. ஆனால், இந்த மக்களவைத் தேர்தலில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வின் மகன் ராஜ் சத்தியன் ஒதுங்கிக்கொண்டார். மற்ற நிர்வாகிகளும் தேர்தலில் போட்டியிட தயங்கினர். அதனால், கடந்த ஓராண்டுக்கு முன்பு அதிமுகவில் சேர்ந்த மருத்துவர் சரவணனை வேட்பாளராக அக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

சரவணன் பணபலம் உள்ளவர் என்பதோடு, மதுரை மாவட்ட மக்களுக்கு அறிந்த முகம். பல்வேறு சமூகப் பணிகளையும், ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவமும் செய்து வருவதால் அதிமுக தலைமை இவருக்கு ‘சீட்’ வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மதுரையில் சரவணா மருத்துவமனையின் தலைவரான மருத்துவர் சரவணன், அரசி யலில் இணைவதற்கு முன்பு தன்னை மு.க.அழகிரியின் ஆதரவாளராக காட்டிக் கொண்டார்.

அதன் பின்பு மதிமுகவில் சேர்ந்து வைகோவுக்கு நெருக்கமான வராகவும், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராகவும் சில ஆண்டுகள் இருந்தார். அங்கு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதால், அங்கி ருந்து 2015-ல் பாஜகவில் சேர்ந்தார். அங்கும் சூழல் சரியில்லாததால் 2016-ல் திமுக-வில் சேர்ந்தார். மருத்துவர் அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டு சிறப்பாகச் செயல் பட்டதால், 2017-ல் நடந்த திருப்பரங் குன்றம் இடைத்தேர்தலில் போட்டி யிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால், அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸிடம் தோல்வி அடைந்தார். போஸ் காலமானதையடுத்து 2019-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் சரவணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட திமுகவில் ‘சீட்’ கிடைக்காத விரக்தியில், பாஜகவில் சேர்ந்தார். அங்கு உடனடியாக அவருக்கு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப் பட்டது.

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதைத்தொடர்ந்து பாஜகவில் மாநகர மாவட்டத் தலைவராக சரவணன் செல்வாக்குடன் இருந்து வந்தார். மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் கட்சித் தலைவர் அண்ணாமலைக்கும், சரவணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த சூழலில் மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவத்தையடுத்து, அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று சரவணன் தெரிவித்தார்.

மேலும், பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதுடன், பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்பு சரவணனை திமுகவில் சேர்க்க பழனிவேல் தியாகராஜன் முயற்சி செய்தார். ஆனால், அதற்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை திமுக தலைமை கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்த சூழலில் திடீரென முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மூலம் பழனிசாமியை சந்தித்த சரவணன், அதிமுகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த ஓராண்டிலேயே அவர் மதுரை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x