புதிய தமிழகம் - தென்காசி, எஸ்டிபிஐ - திண்டுக்கல் @ அதிமுக கூட்டணி

புதிய தமிழகம் - தென்காசி, எஸ்டிபிஐ - திண்டுக்கல் @ அதிமுக கூட்டணி
Updated on
1 min read

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி, எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது.

அதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் கையெழுத்திட்டனர். அதன் தொடர்ச்சியாக, எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியை பழனிசாமி ஒதுக்கீடு செய்தார். அதற்கான ஒப்பந்தத்தில் எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அதனைத் தொடர்ந்து தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் வழங்க இருப்பதாகவும், எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது.

பின்னர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய தமிழகம் கட்சி இரும்பு மனிதர் பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைத்துள்ளது. 2019 மக்களவை தேர்தலிலும் அதிமுக கூட்டணியில்தான் புதிய தமிழகம் கட்சி இருந்தது.

சுயமரியாதை கொண்ட பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி அங்கம் பெற்றிருக்கிறது. தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம். தென்காசி தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கட்சி நிர்வாகிகள் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள் என்றார்.

திண்டுக்கல்லில் முபாரக் போட்டி: நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில்மிகப்பெரிய பிரச்சாரத்தை நாங்கள் செய்வோம். திண்டுக்கல் தொகுதி எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அது எங்களுக்கு வலுவான கட்டமைப்பு உள்ள தொகுதி.

திமுக அரசு கடந்த 3 ஆண்டுகளில் சிறுபான்மையினருக்கு செய்தது என்று ஒன்றையும் கூற இயலாது என்றார். எஸ்டிபிஐ சார்பில் திண்டுக்கல் தொகுதியில் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முகம்மது முபாரக் (நெல்லை முபாரக்) போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in