

சென்னை: மக்களவை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு இலவசமாக கொடுப்பதற்காக பணம், சட்டவிரோத மதுபானம், போதைப் பொருட்கள் கடத்துவதைத் தடுக்க சென்னை ஜிஎஸ்டி மண்டலம் சார்பில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சந்தேகத்துக்கு இடமான வகையில் பணம், சட்டவிரோத மதுபானம், போதைப் பொருள், இலவசங்கள் மற்றும் கடத்தப்பட்ட பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை தடுக்க சோதனைகளை மேற்கொள்ளும் பணியில் ஒவ்வொரு ஆணையரகத்திலும் போதிய அளவு பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளன.
இதன் மூலம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அனைத்து மாவட்டங்களையும் கண்காணிக்கவும், தேர்தல் நடைமுறைகளின்போது வாக்காளர்களை கவர்ந்திழுக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் சட்டவிரோத கடத்தலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் குழுக்களும் தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து சேமிப்புக் கிடங்குகளையும் கண்காணித்து, புடவைகள், மின்சாதனங்கள், பாத்திரங்கள், ரொக்கம் போன்றவற்றை இருப்பு வைப்பதைத் தடுக்கும்.
மேலும், இதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. தேர்தல் காலங்களில் சட்டவிரோதமாக பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களின் நடமாட்டம் தொடர்பான ஏதேனும் தகவல் கிடைத்தால் பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறைகளை (தொலைபேசி எண் – 044-24360140 மின்னஞ்சல் loksabhaeleche-2024@gov.in, புதுச்சேரி கட்டுப்பாட்டு அறை: தொலைபேசி 0413-2221999 மின்னஞ்சல் help-pycgst@gov.in) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.