திமுகவுக்கு மமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு
மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மக்களவை தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முதல் கட்டத்திலேயே நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில், மாநிலத்தில் ஆளும் திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டது.
இந்த சூழலில், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் திமுக, அதிமுக, பாஜக கட்சியுடன் மக்களவைத் தேர்தலில் ஆதரவளித்து இணைந்து பணியாற்றுவதற்கான ஒப்பந்தம் மற்றும் கடிதத்தை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஆதரவு அளித்தனர். குறிப்பாக, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் அப்துல் சமது எம்எல்ஏ ஆகியோர் சந்தித்து ஆதரவளித்தனர்.
தொடர்ந்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்.
குமார் மற்றும் நிர்வாகிகள், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் நிர்வாகிகள், மக்கள் விடுதலைக்கட்சி தலைவர் முருகவேல்ராஜன், தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
