Published : 20 Mar 2024 05:02 AM
Last Updated : 20 Mar 2024 05:02 AM

முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி; விருப்ப படிவம் இன்று முதல் விநியோகம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள், புகார்கள், நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று செய்தியாளர்களிட்ம கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது 68,320வாக்குச்சாவடிகள் உள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் மீறல் அடிப்படையில், 1 லட்சத்து91,291 அளவிலான அரசுக்கு சொந்தமான பொதுச் சொத்துக்களில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சிகள் தொடர்பான விளம்பரங்கள், வைக்கப்பட்டிருந்த பேனர்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டுள்ளன. அதேபோல் 52,938 தனியார் இடங்களிலும் அகற்றப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் உரிமம்பெற்ற 13,556 துப்பாக்கிகள் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், 71 துப்பாக்கி உரிமங்கள் முடக்கப்பட்டுள்ளன. 87 துப்பாக்கி உரிமங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11,828 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 10,434 பேரிடம் இருந்து பிரமாண பத்திரம் பெறப்பட்டுள்ளது. 293 பிடிவாரண்ட்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சிவிஜில் செயலி மூலம் இதுவரை 282 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தபால் வாக்கு வசதிஏற்படத்தப்பட்டுள்ளது. அவர்கள்தொடர்பான விவரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளுக்கு இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை அலுவலர்கள் சென்று தபால் வாக்குக்கான விருப்ப படிவம் ( படிவம் 12 டி) பெறுவார்கள். இது கட்டாயமல்ல; விரும்பியவர்கள் மட்டும் படிவத்தை பூர்த்தி செய்து தரலாம்.

அதன்பின், வாக்குப்பதிவுக்கு முன்னதாக, விருப்ப படிவம் தந்தவர்களிடம் சம்பந்தப்பட்ட அலுவலர், வருவாய், காவல் துறையினர் குழுவாக சென்று, தபால் வாக்கு படிவத்தை தந்து, வாக்கு பதிவு செய்த பின், அந்த படிவத்தை பெட்டியில் போடுவார்கள். அதன்பின், இவ்வாறாக பெறப்படும் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்படைக்கப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரிக்கும் பணி தொடங்குகிறது. முதலில் இயந்திரங்களின் எண்களை கணினியில் பதிவு செய்து, ஒரு மக்களவை தொகுதியில் உள்ள சட்டப்பேரவை தொகுதி வாரியாக பிரிக்கப்படும். அதன்பின், வாக்குச்சாவடி வாரியாக மீண்டும் பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும். இப்பணிகள் முழுமையாக அரசியல் கட்சி பிரதிநிதிகளின் பார்வையில் நடைபெறும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவிதேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி முன்னரே முடிந்துவிட்டது. இனி, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி, வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின் தொடங்கப்படும்.

‘ பூத் சிலிப்’ பொறுத்தவரை, வரும் மார்ச் 30-ம் தேதி அச்சிடும் பணி தொடங்கப்படும். வாக்குப்பதிவு நாளுக்கு 5 நாட்களுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு முழுமையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவை பேரணி: தொடர்ந்து, கோயம்புத்தூரில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்ற பேரணியில், பள்ளிக் குழந்தைகள் பங்கேற்க செய்யப்பட்டது தொடர்பான புகார் குறித்து கேட்டதற்கு, ‘இதுதொடர்பாக வந்த வீடியோ ஆதாரத்தை கொண்டு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கஉத்தரவிட்டுள்ளோம். அறிக்கை கிடைத்ததும் அதன்பின் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x