Published : 21 Aug 2014 08:52 AM
Last Updated : 21 Aug 2014 08:52 AM

வன்னியர் ஓட்டுகளை குறிவைக்கும் திமுக: கோஷ்டிகளை மறந்து பணியாற்ற உத்தரவு

கோஷ்டிப் பூசல்களை மறந்துவிட்டு, 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக வன்னியர் ஓட்டு களை குறிவைத்து பணிகளை மேற்கொள்ளும்படி திமுக முக்கிய நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் ஸ்டாலின், கனிமொழி, அழகிரி தரப்பினர் மற்றும் முக்கியத் தலைவர்களை அழைத்துப் பேசியுள்ளார். அப்போது சில விஷயங்களை உத்தரவாக பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து திமுக முக்கியத் தலைவர்கள் சிலர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

திமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேர்தல் நேரத்தில் கட்சியின் பொதுக்குழு கூடி முடிவு செய்யும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கிறது. எதிரணியினர் மிகுந்த பலத்துடன் இருக்கும் நிலையில், நாம் கோஷ்டி பூசல்களில் ஈடுபடுவதற்குரிய நேரம் இதுவல்ல.

பல மாவட்டங்களில் உட்கட்சித் தேர்தலுக்கான மனுக்கள் அளிக்கப்பட்டு, இன்னும் பணிகள் தொடங்காமல் இருக்கிறது. முதலில் அந்தப் பணிகளைப் பாருங்கள். முடிந்தவரை போட்டி, பொறாமை இல்லாமல் கட்சியின் அனைத்து தரப்பினரையும் திருப்தி செய்யும் வகையில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக பொறுப்புகளை பிரித்துக்கொடுங்கள்.

கிளைக் கழகத்தில் தொடங்கி சமூக ரீதியாக வாக்காளர்களை கணக்கெடுத்து பிரச்சாரத்தை தொடங்குங்கள். அதிமுக ஆட்சியில் பதவி உள்ளிட்ட விஷயங்களில் தேவர் சமூகத்துக்கு அதிமுக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதனால், அந்த சமூகத்தில் பெரும் பான்மையானோர் அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். அதுபோல நாம் இந்த முறை வன்னியர் சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கடந்த காலங்களில் எந்தக் கட்சியையும்விட திமுக மட்டுமே வன்னியருக்கு அதிகளவில் நன்மைகளை செய்துள்ளது.

நாம்தான் வன்னியருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கொடுத் தோம். அதிமுகவில் தமிழ் நாடு தேர்வாணையத் தலைவர் பதவியை தேவர் சமூகத்தினருக்கு கொடுத்தனர். திமுக ஆட்சியில் வன்னியரான காசிவிஸ்வ நாதனுக்கு கொடுத்தோம். வன்னி யரான ராமசாமியை அதில் உறுப்பினர் ஆக்கினோம். அதே போல மாநில தேர்தல் கமிஷன் தலைவராக மறவர் சமூகத்தைச் சேர்ந்த சோ.அய்யரை அதிமுக ஆட்சியில் நியமித்தனர். ஆனால், நாம் வன்னியரான சந்திர சேகரனுக்கு அந்தப் பதவியைக் கொடுத்தோம். அதேபோல் தமிழ்நாடு பிற்படுத் தப்பட்டோர் ஆணையத் தலை வராக வன்னியரான நீதியரசர் ஜனார்த்தனன் மற்றும் மனித உரிமைகள் ஆணையத் தலை வராக வன்னியரான சம்பந்தம் ஆகியோரை நியமித்ததும் திமுகதான். இப்படி வன்னியர் சமூகத்தினருக்கு நாம் செய்த நன்மைகளை இன்னும் நிறைய பட்டியலிடலாம்.

ஆனால், வன்னியருக்கு எதையும் செய்யாமல் அவர்கள் பெயரைச் சொல்லி குளிர்காயும் கட்சிகள் அந்த ஓட்டுகளை குறிவைத்து அரசியல் செய்கின்றன. இந்த முறை நாம் அதற்கு வாய்ப்பு தரக்கூடாது. எனவே, வரும் தேர்தலில் வன்னியர் பரவலாக இருக்கும் 110 தொகுதிகளில் 55 தொகுதிகளில் செல்வாக்கு மிக்க வன்னியர் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் ஸ்டாலின் ஆதரவாளர், அழகிரி ஆதரவாளர், கனிமொழி ஆதரவாளர் என்ற எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அந்தத் தலைவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x