Published : 08 Feb 2018 09:10 AM
Last Updated : 08 Feb 2018 09:10 AM

சேலம் பெரியார் பல்கலை.யில் பண மோசடி: விசாரணை தீவிரம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் நடந்த பண மோசடி புகார் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பெரியார் பல்லைக்கழக தொலைதூர கல்வியில் கடந்த 2010-11-ம் ஆண்டு கொல்கத்தாவைச் சேர்ந்த சரோஜ்குமார் மஜூம் என்பவர் அங்குள்ள இந்திய இன்ஸ்டிடியூட் ஆஃப் புரொபஷனல் கல்வி மையத்தில் எம்எஸ்சி, இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதினார். அவருக்கு மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்படாத நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டம் கீழ் தகவல் பெற்றதில், கட்டணம் செலுத்தாததால் சான்றிதழ் வழங்கப்படவில்லை என பதில் கிடைத்தது.

அவர் முறையாக கட்டணம் செலுத்திய நிலையில், இதுபோன்ற பதிலை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் கடந்த 2014-ம் ஆண்டு கட்டணத்தை செலுத்தி சான்றிதழ் பெற்றார். இதுகுறித்து ஆளுநருக்கு புகார் அளித்த நிலையில், இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தொலைதூர கல்வி மையத்தில் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தில் ரூ.28 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தொலை தூர கல்வி மைய முன்னாள் இயக்குநர் டாக்டர் குணசேகரன், தமிழ்துறை தலைவர் டாக்டர் மாதையன், முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர் பிரின்ஸ் தன்ராஜ், கொல்கத்தாவில் இயங்கும் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயந்த் முகர்ஜி ஆகிய நான்கு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை தொலைதூர கல்வி மையத்தில் மாணவர் செலுத்திய கட்டணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு, இதில், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x