Published : 20 Mar 2024 05:57 AM
Last Updated : 20 Mar 2024 05:57 AM

மக்களவை தேர்தலுக்காக சென்னையில் 3 இடங்களில் வேட்புமனுக்கள் பெறப்படும்: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 3 இடங்களில் பெறப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். 18-வது மக்களவை தேர்தல், தமிழகத்தில் வரும் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனடிப்படையில் சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட வடசென்னை, தென்சென்னை, மற்றும் மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்.19-ம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 3 மக்களவை தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் நாளை (இன்று) முதல் வரும் 27-ம் தேதி வரை பெறப்படும்.

இதையொட்டி வடசென்னை தொகுதி வேட்பாளர்கள் பழைய வண்ணாரப்பேட்டை, பேசின் பிரிட்ஜ் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டா ரவி தேஜாவிடமும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.தனலிங்கத்திடமும் வேட்புமனுக்களை அளிக்கலாம்.

அதேபோல, தென்சென்னை தொகுதிக்கு அடையாறு, டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள சென்னை அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.பி.அமித் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பி.எம்.செந்தில் குமார் ஆகியோர் வேட்புமனுக்களை பெறுவார்கள்.

மத்திய சென்னை வேட்பாளர்கள் செனாய் நகர், புல்லா அவென்யூவில் அமைந்துள்ள மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கே.ஜெ.பிரவீன்குமார் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா ஆகியோரிடம் வேட்புமனுக்களை அளிக்கலாம்.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 2024 ஜன.22-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மொத்தமாக 39 லட்சத்து 1,167 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 11,369 பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்களாவர். 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் 63,751 பேர்.

மாற்றுத்திறனாளிகளும், 85 வயதுக்கு மேற்பட்டோரும் அஞ்சல் வழியாக வாக்களிக்க வரும் 25-ம் தேதிக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ அல்லது தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்கோ சென்று படிவம் 12டி-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் 1950 மற்றும் 1800 425 7012 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x