உங்கள் பதவிக்கு ஓய்வு தர மக்கள் தயாராகிவிட்டனர்: பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு டி.ஆர்.பாலு பதில்

உங்கள் பதவிக்கு ஓய்வு தர மக்கள் தயாராகிவிட்டனர்: பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு டி.ஆர்.பாலு பதில்
Updated on
2 min read

சென்னை: மோடியின் பிரதமர் பதவிக்கு ஓய்வு தர தமிழகம் மட்டுமல்ல, இந்திய மக்களே தயாராகிவிட்டனர் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழகத்துக்கு வாரம் தோறும் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்த வாரம் சேலத்தில் பேசிவிட்டுச் சென்றுள்ளார். கடந்த தேர்தல் காலங்களில் பிரதமர்கள் ஓரிரு முறைதான் தமிழகம் வந்து பிரச்சாரம் செய்தனர்.

ஆனால், பல்லடம்,மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி,கோவை, சேலம் என அடிக்கடி தமிழகம் வந்து பிரச்சாரம் செய்கிறார்.பிரதமர் பதவிக்கு நிரந்தர ஓய்வு தர, தமிழக மக்கள் மட்டுமல்ல; இந்திய மக்கள் அனைவரும் தயராகிவிட்டனர்.

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கடந்த 2013-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரை நினைவுகூர்வது ஏன்? கோவை பேரணியில் 1998-ல் நடைபெற்ற குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இப்படியான நாடகத்தை தேர்தலுக்காக பாஜக ஆரம்பித்துள்ளது.

‘‘திமுக, காங்கிரஸின் ஊழலைப் பற்றி பேச ஒருநாள் போதாது’’ என கூறியுள்ளார் பிரதமர் மோடி. தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த நிதியில் 50 சதவீதத்துக்கு மேல் பாஜகதான் வாங்கியது. சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்ற அதிகார அமைப்புகளை ஏவி, அதன் மூலம்நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளை மிரட்டிப் பறித்த பாஜக உத்தமர் வேஷம் போடு கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2ஜி அலைக்கற்றை முறைகேடுவழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் களை டெல்லி சிபிஐ நீதிமன்றம் 2017-ல் விடுதலை செய்துவிட்டது. அதன் பிறகும் திமுகவின் பங்கு பற்றி பிரதமர் மோடி வலிந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

கடந்த 2022-ம் ஆண்டுஆகஸ்டில் ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போக வேண்டிய 5ஜி அலைக்கற்றை ரூ.1.50 லட்சம் கோடிக்குத்தான் ஏலம் போனது. மீதி பணம் யார் பாக்கெட்டுக்கு போனது என்பதற்கு பிரதமர் பதில் கூறுவாரா?

பெண் சக்தி பற்றி பிரதமர் மோடி, ‘‘பெண்களுக்குச் சேவை செய்ய உறுதி ஏற்று இருக்கிறோம். பெண்கள்தான் பாஜகவின் கவசமாக உள்ளது’’ என்று பேசியுள்ளார். மணிப்பூரில் நின்று அவரால் இப்படிப் பேச முடியுமா? ‘தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்று வோம்’ என்கிறார் பிரதமர் மோடி.

திருநெல்வேலியும் தூத்துக்குடியும் சென்னையும் பெரு வெள்ளத்தில் சிக்கி பேரிடர் நிவாரணம் கேட்டு தமிழகம் கையேந்தியபோது ஒரு பைசாகூட தராதவர், தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்ற போகி றாராம்.

‘ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தி லிருந்து தான் எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்க தொடங்கப் போகிறது என பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார்.

ஏப்ரல் 19-ம் தேதி பாஜகவுக்கு தான் பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது. தோற்கப் போகிறோம் என்பதை உணர்ந்து அவர் இப்படிபேசுகிறார் போலும். 400 தொகுதிகள் வெற்றி பெறப் போவதாக அவர் சொல்லிக் கொள்கிறார். உண்மையில் 400 தொகுதிகள் வெற்றி பெறப் போகிறவர் இப்படி தரம்தாழ்ந்து பேச மாட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in