Published : 19 Mar 2024 02:32 PM
Last Updated : 19 Mar 2024 02:32 PM

“மூழ்கும் கப்பலில் ஏறிய பாமக” - செல்வப்பெருந்தகை கருத்து @ பாஜக கூட்டணி

செல்வப்பெருந்தகை

சென்னை: மூழ்கும் (பாஜக) கப்பலில் ஏறியுள்ளது பாமக. அதுவும் சேர்ந்து மூழ்க போகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாஜகவினர் ஏறக்குறைய ரூ.7,000 கோடியை தேர்தல் பத்திரத்தின் மூலம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் பெற்றது பிச்சையா? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக மக்களை பார்த்து கேட்கிறாரே அது பிச்சையா? இதற்கு நிர்மலா சீதாராமன் பதில் சொல்ல வேண்டும். தமிழக மக்களைப் பார்த்து பிச்சைக்காரர்கள் என நிதியமைச்சர் பேசுவார். இதையெல்லாம் அண்ணாமலை தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை எட்டப்பன் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

பிரதமர் மோடி சர்வதிகார ஆட்சி, கொடுங்கோல் ஆட்சி் நடத்திக் கொண்டு இருக்கிறார். தேர்தல் பத்திரம் பற்றி பிரதமர் மோடி வாய்திறக்க வேண்டும். இந்திய மக்கள் கேள்விபடாத நவீன விஞ்ஞான ஊழலை மோடி செய்திருக்கிறார். பாஜக ஆட்சியின் முகத்திரை தினம் தினம் கிழிந்துகொண்டு இருக்கிறது.

இரண்டு, மூன்று நாட்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளிவரும். தமிழகத்தில் தமிழிசை போட்டியிட்டால் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெறும் சூழல் ஏற்படலாம். மூழ்கும் (பாஜக) கப்பலில் பாமக ஏறியுள்ளது. அதுவும் சேர்ந்து மூழ்க போகிறது. காங்கிரஸ்தான் அனைவருக்குமான இயக்கம். சமூக நீதிக்கான கட்சி, அனைவரையும் தூக்கி பிடிக்கின்ற கட்சி.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இண்டியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே சூறாவளி பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் தேதிகள் வெளியிடப்படும். நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். அவர்கள் இயந்திரங்களை நம்பி தேர்தலில் நிற்கிறார்கள். மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள்” என்றார் செல்வப்பெருந்தகை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x