

ராமேசுவரம்: மத்திய அரசை கண்டித்து, மார்ச் 26-ம் தேதி திருவோடு ஏந்தி கடலில் இறங்கி போராட்டத்தை நடத்தப்போவதாக, ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினரால் நேற்று முன்தினம் ராமேசுவரம் மீனவர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் அருகே மீனவப் பிரதிநிதி சேசுராஜா தலைமையில், மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதை கண்டித்தும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராமேசுவரம், புதுக்கோட்டை, நாகை, காரைக்கால் மீனவர்கள் 63 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும், மார்ச் 26-ம் தேதி ராமேசுவரம் கடலில் இறங்கி திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தப்படும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.