சங்கர்ராமன் கொலை வழக்கு: மாவட்ட நீதிபதியின் பணிநீக்க உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்

சங்கர்ராமன் கொலை வழக்கு: மாவட்ட நீதிபதியின் பணிநீக்க உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
Updated on
1 min read

சென்னை: சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியாருடன் தொலைப்பேசியில் பேசிய விவகாரம் தொடர்பாக மாவட்ட நீதிபதியை பணிநீக்கம் செய்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியான சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது.அப்போது, ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ராஜசேகரன், குற்றம்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார், உயர் நீதிமன்ற மதுரை கிளை பிரிவு அதிகாரி மற்றும் சங்கராச்சாரியாருக்கு வேண்டப்பட்ட கவுரி காமாட்சி ஆகியோருடன் தொலைப்பேசியில் பேசியதாக புகார் கூறப்பட்டது.

இது குறித்து உயர் நீதிமன்றம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை, காவல் துறை அதிகாரி நடத்திய உண்மை கண்டறியும் விசாரணை அடிப்படையில் ராஜசேகரனுக்கு எதிராக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் நடத்திய இந்த விசாரணையின் அடிப்படையில் ராஜசேகரனை பணிநீக்கம் செய்து 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் நீதிபதி ராஜசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிபதிகள் மிகுந்த நேர்மையுடன் இருக்க வேண்டும். இந்த வழக்கில் முன்னாள் நீதிபதி ராஜசேகரனின் நேர்மையை சந்தேகிக்கும் வகையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in