தேர்தல் அரசியலில் ரீ-என்ட்ரி: ஆளுநர் பதவியில் இருந்து தமிழிசை ராஜினாமா

தமிழிசை சவுந்தரராஜான் | கோப்புப் படம்
தமிழிசை சவுந்தரராஜான் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்துள்ளார்.

தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் தமிழிசை சவுந்தரராஜன் பணியாற்றி வருகிறார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டார். கனிமொழியிடம் சில லட்சங்கள் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற பின் 2019 செப்டம்பரில் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2021 பிப்ரவரியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் தமிழிசை கூடுதலாக நியமிக்கப்பட்டார்.

இரு மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றி வந்த நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிடும் வகையில் தமிழிசை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று ஏற்கெனவே பேச்சுக்கள் எழுந்தன. அது பற்றிய கேள்விக்கு தமிழிசை, “ஆளுநர் பதவியை நான் ராஜினாமா செய்ய உள்ளேன் என்பது தவறான செய்தி. கட்சி மேலிடம் என்ன உத்தரவிடுகிறதோ அதைத்தான் நான் செய்து வருகிறேன். எப்போதும் மக்களுக்காக நான் இருப்பேன். பிரதமர் மோடி மற்றும் ஸ்ரீ ராமரின் தயவால் நான் எனது மனசாட்சிப்படி பணியாற்றி வருகிறேன். எனவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வேன் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று விளக்கமளித்தார்.

இந்தநிலையில் தான் இன்று தமிழிசை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மக்களவை தேர்தலில் தூத்துக்குடி, நெல்லை அல்லது புதுச்சேரியில் தமிழிசை போட்டியிடலாம் என்று பேசப்படும் நிலையில் அவரது ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in