ராகுல் காந்தியின் நடைபயணம் நிறைவு விழா பொதுக்கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று மும்பை பயணம்

ராகுல் காந்தியின் நடைபயணம் நிறைவு விழா பொதுக்கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று மும்பை பயணம்
Updated on
1 min read

சென்னை: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைநீதி நடைபயணம் நிறைவு விழா மற்றும் இந்திய கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடுகாங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் இன்று மும்பை புறப்பட்டு செல்கின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை கடந்த ஜனவரி 16-ம்தேதி மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கினார். மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் வழியாக இந்த பயணம் மும்பை தாதரியில் இன்றுநிறைவடைகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இன்று மும்பை புறப்பட்டுச் செல் கின்றனர்.

அதனைத் தொடர்ந்து இன்று இரவு 7 மணி அளவில் மும்பை சத்ரபதி சிவாஜி அரங்கில், இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் நிறைவுவிழா மற்றும் இந்தியா கூட்டணிகட்சி தலைவர்கள் பங்கேற்கும்பொதுக்கூட்டமும் நடைபெறு கிறது. இதில் பங்கேற்பதற்காக கூட்டணிக் கட்சியை சேர்ந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அகில இந்திய காங்கிரஸ் அழைப்புவிடுத்துள்ளது. அதில் பங்கேற்பதற்காக இன்று காலை ஸ்டாலின் மும்பை புறப்பட்டுச் செல்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in