

சென்னை: சென்னை யானை கவுனியில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.15 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை யானை கவுனி என்.எஸ்.சி போஸ் சாலையில், யானைகவுனி போலீஸார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவருடைய பையை சோதனை செய்தனர். அதில் எந்த ஒரு ஆவணமும் இன்றி ரூ.15 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த நபர் பெரம்பூர் புளியந்தோப்பு நெடுஞ்சாலையை சேர்ந்த முகமது முஸ்தபா ( 40 ) என்பதும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. பணத்துக்கு எந்த ஒரு உரிய ஆவணங்களும் இல்லாததால். யானை கவுனி போலீஸார் நுங்கம் பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.