Published : 16 Mar 2024 05:13 AM
Last Updated : 16 Mar 2024 05:13 AM

4 மாநகராட்சி விரைவில் உதயம்: நடைமுறைகளை தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள், அருகில் உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்கும் நடைமுறைகளை தொடங்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெருநகரங்களுக்கு அருகில் உள்ள நகர்ப்புறத் தன்மை கொண்ட,வேகமாக நகரமயமாகி வரும் பகுதிகளிலும் நகரங்களுக்கு இணையான தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆற்றல்மிகு மின்விளக்குகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரும் நோக்கோடு, விரைவாக நகரமயமாகி வரும் பகுதிகளை, அவற்றின் அருகில் உள்ள நகரங்களோடு இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சிகளாக அரசு உருவாக்கி வருகிறது.

அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும்தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வரலாற்று தலைநகரமாக விளங்கும் புதுக்கோட்டை, கோயில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று, அந்த நகரங்களையும், அவற்றின் அருகில் வேகமாக நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கடந்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி அறிவித்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்துவது தொடர்பாக உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவதற்கான நடைமுறைகளை தொடங்க முதல்வர்ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையில் உள்ள பகுதிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி, நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் 2 பேரூராட்சிகள், 5 ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது தொடர்பான அரசின் உத்தேச முடிவை அறிவித்து நேற்று உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

1998-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும். இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகில் உள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேலும் சிறப்பாக ஏற்படுத்தவும், இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பல்வேறு தேவைகளுக்காக இந்தபகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலா பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பாக அமையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x