Last Updated : 15 Mar, 2024 04:01 PM

 

Published : 15 Mar 2024 04:01 PM
Last Updated : 15 Mar 2024 04:01 PM

இலங்கை கடற்படையினரால் காரைக்கால், தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று இரவு கைது செய்தனர்.

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயமதி என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் அதே ஊரைச் சேர்ந்த முருகானந்தம் (48), பாபு (24), வேல் முருகன் (39), மணிகண்டன் (37), காரைக்கால் மேடு கிராமத்தைச் சேர்ந்த வேல்மணி (28), பால முருகன் (44), கந்தகுமார் (34), வடிவேல் (34), சுந்தரவேல் (52), முருகன் (34), பரசுராமன் (41), காரைக்கால் இடும்பன் (37), நாகப்பட்டினம் டாடா நகர் சேகர் (47), மயிலாடுதுறை மாவட்டம் தாழம்பேட்டை மோகன் (45), புதுப்பேட்டை சந்துரு (34) ஆகிய 15 பேர் கடந்த 13-ம் தேதி இரவு 11 மணியளவில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

நேற்று (மார்ச் 14) இரவு 11.45 மணியளவில் கோடியக்கரைக்கு அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 15 மீனவர்களும் விசைப் படகுடன் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழக மீனவர்கள் 15 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக விசைப் படகுடன் கடந்த 10-ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு நாட்களுக்குள் மீண்டும் 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது, காரைக்கால், தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x