

தமிழகத்தில் திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில், அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டம், மாநில தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா தலைமையில் திருச்சியில் நேற்று நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறியது: வரும் மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என மிகுந்த வலியோடும், வலிமையாகவும் திமுக கூட்டணியை வலியுறுத்தி வந்தோம். ஆனால், எங்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை.
இருந்தாலும், பாசிச பாஜக ஆட்சியில் இருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்றும் வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு ஆதரவு தருவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலிலாவது எங்களுக்கு ஒரு இடம் ஒதுக்க திமுக முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருகிறது. அதேநேரம், நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளுக்கு உள்ள 5 உறுப்பினர்களில் 4 பேர் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே முஸ்லிம்களுக்கும் சமூக நீதி அடிப்படையில் வரும் மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேர்தல் பத்திரங்களில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை மறைக்கவே குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு இப்போது கையில் எடுத்துள்ளது.