Published : 13 Mar 2024 03:25 PM
Last Updated : 13 Mar 2024 03:25 PM

கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரிக்கு முதல்வர் அறிவித்த 31 புதிய திட்டங்கள் - ஒரு பட்டியல்

கோவை: கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.1,237.51 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர், ஈரோடு திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்ததுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "கோவைக்கும், நீலகிரிக்கும், திருப்பூருக்கும், ஈரோட்டுக்கும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்த ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. அதுமட்டுமில்லாமல், இந்த 4 மாவட்டங்களில் 560 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 273 திட்டங்கள் இன்றைய விழாவில், மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. 489 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 35 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. 223 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 57 ஆயிரத்து 325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த மதிப்பு 1,273 கோடியே 51 லட்சம் ரூபாய்.

இதன் தொடர்ச்சியாக, சில புதிய அறிவிப்புகளையும் இந்த விழாவில் மகிழ்ச்சியோடு நான் வெளியிட விரும்புகிறேன்" என்று கூறி மாவட்ட வாரியாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். கோவை மாவட்டத்துக்கான 13 அறிவிப்புகள்:

  • தென்னை மரங்களை அதிகமாக பாதிக்கின்ற நோய் வேர்வாடல் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கின்ற மரங்களை வெட்டி அகற்றுவதற்காக ரூ.14.4 கோடி நிதி வழங்கப்படும்.
  • 3 இலட்சம் தென்னங்கன்றுகள், ரூ.2 கோடியே 80 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்குஇலவசமாக வழங்கப்படும்.
  • அகில இந்திய அளவில் 157 ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் மூலமாக பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யவும் வங்கி கணக்கில் அப்பணத்தை வரவு வைக்கவும் நடவடிக்கை
  • கூட்டுறவு சங்கம் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விற்பனை.
  • விலாமரத்தூர் சாலை முதல் அத்திக்கடவு அணை வரை 8.29 கி.மீ நீளத்தில், ரூ.9 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்படும்.
  • வார்டு எண் 11 மூங்கில் மடை குட்டை பழங்குடியினர்வசிக்கும் பகுதியில் ரூ.57 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் மற்றும் வடிகால் அமைக்கப்படும்.
  • மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மாவுத்தம்தி ஊராட்சிக்குட்பட்ட வாளையார் வனப்பகுதியில் தரை மட்ட குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும்.
  • காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைக்கப்படும்.
  • இக்கரை பூளுவாம்பட்டி ஊராட்சி, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், சோமையம் பாளையம்ஊராட்சி, மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் திவான்சாபுதூர் ஊராட்சி மற்றும் மாவுத்தம்தி ஆகிய ஊராட்சிகளில் நான்கு பாலங்கள் கட்டப்படும்.
  • 15 அங்கன் வாடி மையங்கள், 18 நியாயவிலைக் கடைகள், 14 சமுதாய நலக் கூடங்கள், 7 பேரூராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும்.
  • கோயம்புத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மழைநீர் வடிகால் மற்றும் கான்கீரிட் சாலை ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • உக்கடம் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தினால் அகற்றப்பட்ட பேருந்து நிலையத்தினை ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் மறுசீரமைக்கப்படும்.
  • ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளி வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஹாக்கி விளையாட்டு தரை அமைக்கப்படும்.

ஈரோடு மாவட்டத்துக்கான 9 அறிவிப்புகள்: சோலார் பகுதியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காய்கறி மளிகை சந்தை வளாகம் அமைக்கப்படும்.

  • வ.உ.சி பூங்கா, 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தித் தரப்படும்.
  • ஈரோடு மாநகராட்சிப் பகுதியில 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன், காவேரி ஆற்று முகப்பு மேம்படுத்தப்படும்.
  • புதிய மாவட்ட மைய நூலகம் ஒன்று 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பர்கூர் ஊராட்சி தாளவாடி ஊராட்சி ஒன்றியம் தலமலை ஆசனூர் ஊராட்சிகளில் மலைவாழ் மக்கள் வசிக்கும் இணைப்புச் சாலை வசதி இல்லாத அந்த 9 கிராமங்களுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணைப்புச் சாலை வசதி ஏற்படுத்தப்படும்.
  • 8 சமுதாய நலக்கூடங்கள் கட்டப்படும்.
  • சத்தியமங்கலம் நகராட்சியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • மஞ்சள் மற்றும் மஞ்சள் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் இருப்பு வைத்து வியாபாரம் செய்ய ஏதுவாக குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பெருந்துறையில் நொய்யல் ஆற்றின் வடக்கு கரையில் இருக்க கொடுமணல் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அடுத்த தலைமுறையினரும் அறிந்துகொள்ள காட்சிப்படுத்திட ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், தொல்லியல் துறையின் மூலம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

திருப்பூர் மாவட்டத்துக்கான 5 அறிவிப்புகள்: பெருமாநல்லூர் சாலையில், நல்லாற்றில், பொம்மநாயக்கன்பாளையம் மற்றும் போயம்பாளையம் சாலை வரை மற்றும் பிச்சம்பாளையம் மெயின் சாலை முதல் ராஜா நகர் வரை 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலங்கள் கட்டப்படும்.

  • திருப்பூர் மாநகராட்சிக்கு 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடம் அமைக்கப்படும்.
  • கிராமப் பகுதிகளில் 8 புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்கள் 1 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • 13 சமுதாய நலக்கூடங்கள் 11 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக விபத்து மற்றும் எலும்புமுறிவு சிறப்பு மருத்துவமனை 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்துக்கான 4 அறிவிப்புகள்: உதகமண்டலம் அரசு தாவரவியல் பூங்கா உலகத் தரத்துக்கு இணையாக மேம்படுத்தப்படும். இதற்காக பெரணி இல்லம் புதுப்பித்தல், புதிய சுகாதார வளாகம் அமைத்தல், ஆர்க்கிட் மற்றும் போன்சாய் வளர்ப்புக்கூடம், வடிகால் கால்வாய் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

  • 5 அரசு துணை சுகாதார நிலையங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 2 கோடியே 50 இலட்சம் ரூபாயில் புதிய கட்டடங்கள் அமைக்கப்படும்.
  • தனியார் கட்டடங்களில் இயங்குகிற 10 நியாயவிலைக் கடைகளுக்கு 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
  • நீலகிரி மாவட்டத்தில் 2 சமுதாய நலக் கூடங்கள் 1 கோடியே 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x