Last Updated : 19 Feb, 2018 08:29 AM

 

Published : 19 Feb 2018 08:29 AM
Last Updated : 19 Feb 2018 08:29 AM

உடுமலையில் மக்காச்சோளம் மகசூல் இருந்தும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் விரக்தி

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையை நம்பி ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடியில் ஈடுபட்டனர். அறுவடை நடைபெற்றுவரும் நிலையில், கட்டுப்படியான விலை கிடைக்காததால் சிறு, குறு விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது:

ஏக்கருக்கு 2.5 டன் முதல் 4.5 டன் வரை உற்பத்தி இருக்கும். முறையான பராமரிப்பு, தண்ணீர், ரகம், உரம் உள்ளிட்ட பல காரணங்கள் மகசூலில் அடங்கும். கடந்த ஒரு மாதமாக அறுவடை நடைபெற்றது. கடுமையான நெருக்கடிக்கு இடையேயும், கிடைத்த மகசூலுக்கு கட்டுப்படியான விலை இல்லாத சூழல் உள்ளது.

குவிண்டாலுக்கு ரூ.1600 வரை விலை இருந்தும், சில மொத்த வியாபாரிகள் ரூ.1250 என்ற விலையிலேயே கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சிறு, குறு விவசாயிகள் வேறு வழியின்றி, கிடைத்த விலைக்கு விற்றுச் செல்லும் நிலை உள்ளது. அதிகாரிகள் இருப்பு வைத்து விற்குமாறு அறிவுறுத்து கின்றனர்.

வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பதால், விவசாயிகள் பாடு திண்டாட்டமாக உள்ளது. நெல் கொள்முதல் மையங்களை திறப்பதைப்போல, மக்காச்சோளத்துக்கும் ஏற்பாடு செய்து குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும்’ என்றனர்.

வேளாண் அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘உடுமலை பகுதியில் மட்டும் 10500 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி நடைபெற்றது. 90 சதவீதம் அறுவடை நிறைவடைந்துவிட்டது. எஞ்சிய 10 சதவீதம் அறுவடை செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குவிண்டால் ரூ.1450-க்கு பெறப்படும் என ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும், வியாபாரிகள் சிலர் ரூ.1250 என்ற விலைக்கே கொள்முதல் செய்து வருகின்றனர். தற்போதைய விலை நிலவரம் எதிர்காலத்தில் மாறக்கூடியது. ரூ.1600 வரை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனை மறைத்து, வியாபாரிகள் லாபநோக்கில் விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர். இதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

வியாபாரிகளுக்குள் சிண்டிகேட் இருப்பதைபோல, விவசாயிகளும் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு விற்கமாட்டோம் என உறுதியேற்க வேண்டும்.

அப்போதுதான், கட்டுப்படியான விலை கிடைக்கும். அதுவரை இருப்பு வைக்கவும், அதன்பேரில் கடன் வழங்கவும் விற்பனை குழு ஏற்பாடு செய்துள்ளது. அதனை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்தியும், விவசாயிகள் சிலர் அதை பின்பற்றுவதில்லை. விழிப்புணர்வு ஏற்படாதவரை ஏமாறுவதை தடுக்க முடியாது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x