மக்களவைத் தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் துப்பாக்கியுடன் அணிவகுப்பு
சென்னை: மக்களவைத் தேர்தல் தேதிஓரிரு தினங்களில் அறிவிக்கப்படஉள்ளது. தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும். அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த உடனேயே பிரச்சாரமும் சூடுபிடித்து விடும்.
எனவே, அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் தடுப்பதற்காக, அதற்கு முன்னதாகவே ஒவ்வொரு மாநிலத்துக்கும் துணைராணுவப் படையினர் அனுப்பப்படுவார்கள். அந்த வகையில், தமிழகத்துக்கு 25 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ படையினர் வந்துள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை 2 கம்பெனி (ஒவ்வொருகம்பெனியிலும் சுமார் 90 வீரர்கள்) துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். அவர்களில் ஒரு தரப்பினர் எழும்பூரில் உள்ள சமூகநலக்கூடத்தில் தங்க வைக்கப்பட் டுள்ளனர்.
இந்நிலையில், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் எழும்பூரில் தங்க வைக்கப்பட்டுள்ள துணை ராணுவப்படையினர் நேற்று மாலை மன்றோ சிலை அருகே எஸ்.எம். நகரிலிருந்து எழும்பூர் வரை துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு நடத்தினர்.
இவர்களுடன் உள்ளூர் போலீஸாரும் கலந்து கொண்டனர். வரும்நாட்களிலும் இதேபோல் அணிவகுப்பு நடைபெறும் என துணைராணுவப்படையினர் தெரிவித்தனர்.
