Published : 04 Feb 2018 10:22 AM
Last Updated : 04 Feb 2018 10:22 AM
காவிரி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்ட நிலையில், டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்களைக் காப்பதற்காக கர்நாடகாவிடம் இருந்து தற்காலிக ஏற்பாடாக 7 டிஎம்சி தண்ணீரைப் பெறுவதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற பொது விருந்தில் பங்கேற்ற பின்னர், முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பி.தங்கமணி,எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் நேற்று தலைமை செயலகம் வந்தனர்.
முதல்வர் அலுவலக அறை யில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், காவிரி நதிநீரைப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. மின்வாரிய பிரச்சினை, குடிநீர் விநியோகம் குறித்தும், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்குரிய பங்கை கேட்டுப் பெறுவது தொடர்பாகவும் பேசப்பட்டதாகத் தெரிகிறது.
டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீர் இல்லாததால் நெற் பயிர்கள் கருகும் அபாயம் இருப்பதால் காவிரியில் விரை வாக தண்ணீரைப் பெறுவதற்கு சட்டரீதியாக எடுக்கப்பட வேண் டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இக்கூட்டத்தில், அரசு தலை மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT