போதை பொருள் விவகாரம்: முதல்வர் ராஜினாமா செய்ய பழனிசாமி வலியுறுத்தல்

பழனிசாமி | கோப்புப்படம்
பழனிசாமி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தல் விவகாரத்துக்கு பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யாதது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் நேற்று பதிவிட்டிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.110 கோடிமதிப்பிலான, 100 கிலோ போதைப்பொருளும், 874 கிலோ கஞ்சாவும் திருச்சி சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றுவிட்டது. இதற்கு தார்மிகப் பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யாதது ஏன்?

அதிமுக ஆட்சியில் தொடர்ந்து குரல் கொடுத்து, அரசின் கவனத்துக்கு பல்வேறு விஷயங்களைக் கொண்டு வந்த சமூகப் பொறுப்பாளர்கள் பலர், திமுக ஆட்சியில் மக்களை அச்சுறுத்தும் போதைப் பொருள் விவகாரத்தில் மவுனமாக இருப்பது ஏன்?

மத்திய அமைப்புகளால்தான் தமிழகத்தில் போதைப் பொருட்கள் பறிமுதல்செய்யப்படுகின்றன. எனவே, தமிழ்நாடு காவல் துறை துரித நடவடிக்கை மேற்கொண்டு, போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை எட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in