

சென்னை: என்எல்சி நிறுவன பங்குகளை விற்கும் முடிவை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் லாபம் ஈட்டி வரும் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 79.2 சதவீத பங்குகளை மத்திய அரசு வைத்திருக்கிறது.
இதில் 7 சதவீத பங்குகளை ஆஃபர் பார் சேல்ஸ் முறையில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது எனவும், இந்த பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக ரூ.2,000 கோடி முதல் ரூ.2,100 கோடி வரை நிதி திரட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2002-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் என்எல்சி நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் என்எல்சி தனியார் மயமாகாமல் தடுக்கப்பட்டது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, என்எல்சி பங்குகளை விற்க முனைந்து இருப்பது வேதனை தருகிறது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.