

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி என்ஜிஓ காலனியில் பாஜக தேர்தல் அலுவலகத்தை ஹெச்.ராஜா திறந்து வைத்தார். மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 57 ஆண்டுகளுக்குப் பின்னர் மாற்று சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது. வாக்குப் பதிவு இயந்திரம் பற்றி ஞானம் இல்லாதவர்கள்தான் அதை குறை கூறுகின்றனர். கடந்த 2006-லிருந்து போதைப் பொருள் கடத்திய நபர்தான் ஜாபர் சாதிக். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அவரைப் பற்றி எப்படி முதல்வருக்கு தெரியாமல் இருக்கும். ஜாபர் சாதிக் முதல்வர் குடும்ப உறுப்பினராக எப்படி வந்தார்.
டிஜிபியே அவருக்கு பரிசு கொடுத்திருக்கிறார். தெரிந்தே காவல் துறையும், அரசும் போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையவரை ஊக்குவித்துள்ளனர். இதில் டி.ஜி.பி.க்கும் பொறுப்பு உள்ளது. இதற்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும். தனது செல்வாக்கு தெரிந்து கமல் எடுத்த முடிவை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.